tamilnadu

img

பெண் விடுதலைக்காக நூறாண்டுகளாய்....

பெண் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் சமூக, பொருளாதார நிலைமைகளின் குறிப்பிட்ட சூழலில் மார்க்சியத் தத்துவத்தையும், நடைமுறையையும் இணைப்பதற்கான முயற்சியை 1920ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டதிலிருந்தே கட்சிமேற்கொண்டது.  “பெண்களின் பிரச்சனைகள்” குறித்தகட்சியின் புரிதல், அதன் நேரடியான பணிகள் – குறிப்பாகப்பெண் கம்யூனிஸ்ட்டுகளின் பணிகள் மற்றும் அனுபவங்கள் -  மூலமாகவே உருவானது.  மாதர் இயக்கங்கள் போராடிப் பெற்ற அனைத்து ஆதாயங்களையும் தலைகீழாக மாற்றுவதற்கான முயற்சி பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பிற்போக்கான ஆட்சிக் காலத்தில் இன்று மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில், அனைத்து நிலைகளிலும் பெண்களின் உரிமைகளை பாதுகாத்திட கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பெண்களின் போராட்ட இயக்கங்களின் உறுதியான கூட்டாளிகளாக அவர்களை ஆக்குகிறது. 

துவக்க காலங்கள் 
கீழ்க்காணும் மூன்று பிரச்சனைகளில் சுதந்திரப் போராட்டத்திற்குள் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தில் புதியதொரு கண்ணோட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் கொண்டு வந்தனர்.  முதலாவது, உழைக்கும் வர்க்கங்களின் உறுப்பினர்களாக பெண்கள் சுரண்டப்படும் பிரச்சனை மற்றும் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தின் பகுதியாக பெண் விடுதலைக்கான போராட்டத்திற்கான உள்ளார்ந்த இணைப்பு. இரண்டாவது, பெண்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சனைகள் – குறிப்பாக சாதிய நடைமுறையைஅழித்தொழிப்பதற்கான போராட்டங்கள். மூன்றாவது,பாரம்பரியமாகவும், மத நூல்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ள,முதலாளித்துவ கலாச்சாரங்களில் காணப்படும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பனவாகும். 

1929ஆம் ஆண்டு மீரட் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 கம்யூனிஸ்டுகள், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அளித்த அறிக்கை, இதனைப் பிரதிபலித்த இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முக்கியமான துவக்க கால அறிக்கையாகும்.  “குடும்ப அமைப்பைச் சுற்றியுள்ள உணர்வுகள், சுரண்டலுக்கான வழிமுறையாக அது பயன்படுத்தப்படுவதை எப்போதும் மூடி மறைக்கிறது. குடும்பம் என்ற போர்வையில் பெண்களும், குழந்தைகளும் சுரண்டப்படுவது சோசலிச சமூக அமைப்பின் கீழேயே முடிவுக்குக் கொண்டு வரப்படும்….” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.  ..ஆணை விடத் தாழ்ந்ததாகவே பெண்ணின் நிலை பாரம்பரியமாக இருந்து வருகிறது.  சில சமயங்களில் நடைமுறையில் அது அடிமைத்தனமாக இருக்கிறது…  சோவியத் யூனியனில் ஏற்பட்டு வரும் பெண் விடுதலையே …. முன்னோக்கி செல்வதற்கான வழியாகும்….“  வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு குறித்து கடுமையான விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் முன்வைத்தனர். 

வர்க்கப் போராட்டங்களில் இணைந்திட பெண்களை ஊக்குவிப்பது  
சுதந்திரப் போராட்டத்தின் பகுதியாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்ட இயக்கங்களில் பெரும் எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்றனர். அப்போது  தொழிலாளி வர்க்கம்மற்றும் விவசாயப் பெண்கள், பம்பாயின் பஞ்சாலைகள், ஷோலாப்பூரின் பீடித் தொழிலாளர்கள், பீகார், வங்காளத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயப் பெண்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளான கூலி, நிலம் மற்றும் கண்ணியத்திற்காக மாபெரும்இயக்கங்களை தொழிற்சங்கங்களில் செயல்பட்டு வந்தகம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தனர். இத்தகைய பிரதானமான தொழிலாளர் இயக்கங்களில் சிலவற்றிற்கு அகிலஇந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) தலைமை தாங்கி வழிநடத்தியது. 1920ல் துவக்கப்பட்ட இந்த தொழிற்சங்க அமைப்பு, உடனடியாக கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கின் கீழ் வந்தது. ஏஐடியுசி துவக்கப்பட்ட உடனேயே அதில் சேர்ந்தவரான சந்தோஷ் தேவி இந்த அமைப்பின் ஆரம்ப கால அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர்வங்காளத்தின் சணல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே செயல்படத் துவங்கினார். பம்பாயில் பார்வதி போரே மற்றும் 1930களிலும், 1940களிலும் அகல்யா ரங்கனேக்கர், உஷாதாய் டாங்கே, விமலா ரணதிவே போன்ற மேலும் பலரும் இப்பணிகளில் ஈடுபட்டனர்.

1936ம் ஆண்டு அகில இந்திய விவசாயிகள் சங்கம்துவக்கப்பட்ட பின்பு கம்யூனிஸ்ட்டுகளின் முக்கியமான பங்களிப்பினால், நிலம் மற்றும் கண்ணியம் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து நடைபெற்ற இயக்கங்களில் விவசாயப் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அணி திரண்டனர். தேபாகா, தெலுங்கானா, சுர்மா பள்ளத்தாக்கு போராட்டம் ஆகியவை எல்லாம் பொருளாதார மற்றும்சமூக நீதிக்காக இந்திய உழைப்பாளி மக்கள் நடத்தியபோராட்டங்களில் முக்கியமானவை ஆகும். ஆண்களுக்கு இணையாக இப்போராட்டங்களில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, செங்கொடியைத் தங்களது கைகளில் ஏந்தி இப்போராட்டங்களை பெரும்பாலும் தலைமை தாங்கி நடத்துபவர்களாக இப்பெண்கள் இருந்தனர்.

கட்சியின் தலைமையில் இப்பெண்கள் மேற்கொண்ட வர்க்க அடிப்படையிலான போராட்ட இயக்கங்கள், வழக்கத்திலிருந்த சமூக நடைமுறைகளை எதிர்த்த இயக்கங்களை மேலும் முன்னுக்குத் தள்ளின. வர்க்க அடிப்படையிலும், சமூகக் கண்ணோட்டத்திலும் என ஆணாதிக்கக் கலாச்சாரங்களுக்கு இரட்டைச் சவாலாக இவை இருந்தன.மகாராஷ்டிராவின் தானேவில் வார்லி ஆதிவாசி மக்களிடையே 1945ல் துவங்கிய கோதாவரி பருலேக்கரின் பணி, இந்த விஷயத்தை கூர்மையாக வெளிப்படுத்துகிறது. வர்க்கப் போராட்டங்களில் ஆதிவாசிப் பெண்களின் பங்கேற்பின்போது கூட்டியக்கங்களின் வலு காரணமாக அவர்களுக்கும் அவர்களை அடக்கி ஒடுக்குபவர்களுக்கும் இடையேயான சமூக உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் நிலச்சுவான்தார்களிடம் எதிர்கொண்ட கொடூரமான திட்டமிட்ட பாலியல்வன்முறைகளுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்ப உதவியது என காட்டுமிராண்டித்தனமான சுரண்டல்களுக்கு எதிரான போராட்ட இயக்கங்களில் பங்கேற்ற ஆதிவாசிப் பெண்கள், தங்களது விடுதலை உணர்வை விவரித்தனர்.

திரிபுராவில் தசரத் தேவ் வர்மாவின் தலைமையில், மிகவும் சுரண்டப்பட்ட ஆதிவாசியின மக்களிடையே – குறிப்பாக ஆதிவாசிப் பெண்களிடையே – கல்வியறிவையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இதன் காரணமாக, நிலப்பிரபுத்துவம் கட்டாயமாக வசூலித்த “டைடூன்”னுக்கு எதிரான பிரம்மாண்டமான எழுச்சி ஏற்பட்டது. இப்போராட்டத்தில் மூன்று ஆதிவாசிப் பெண்களை தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

“வர்க்கத்திற்குள்”
“வர்க்கத்திற்குள்ளேயே” ஆண்-பெண் இடையேயான அசமத்துவமான உறவுமுறைகளை எதிர்த்த இயக்கங்களை பெண்கள் தாங்களாகவே துவக்கினர். தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் குறிப்புகள், இதுபோன்ற பல பிரச்சனைகளை எழுப்பின. பெரும்பாலும் குடும்பத்தினுள் காணப்படும் சமன்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் துவங்கினர். போராட்ட இயக்கத்தைத் தங்களது வாழ்க்கைத் துணை ஆதரிக்கவில்லை என்பதால்,“நிச்சயிக்கப்பட்ட” திருமண நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர். இத்தகைய பல்வேறு உதாரணங்களை பி. சுந்தரய்யா தனது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். தங்களது கருத்துக்களைத் தயக்கமின்றி முன்வைக்க கட்சிஎவ்வாறு பெண்களை ஊக்குவித்தது என இப்போராட்ட இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற மல்லு ஸ்வராஜ்யம்விவரிக்கிறார்.  இத்தகைய கேள்விகள் எல்லாம் இயக்கத்தினுள் இருந்த ஆண்களுக்கு சௌகரியமானவையாக இல்லாதிருந்தபோதும், ஒரு குடும்பத்தின் கணவன், மனைவி என இருவரும் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்பவராக உள்ளபோது வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது குறித்த கேள்விகளையும் பெண்கள் எழுப்பினர்.  இவ்வாறாக, ஆண்களோடு இணைந்த ஒன்றுபட்ட இயக்கங்களுக்குள்ளே பெண் சமத்துவத்திற்கான இயக்கத்தை பல்வேறு நிலைகளில் கட்சியின் உதவியுடன் கம்யூனிஸ்ட் பெண்கள் முன்னெடுத்தச் சென்றனர்.  மேலும், இயக்கத்தினுள் பெண்கள் முக்கியமான பங்கை ஆற்றினர்.

வர்க்கப் போராட்டமானது அதில் பங்கேற்கும் பெண்களின் உணர்வுநிலையை மாற்றியமைக்கிற அதே நேரத்தில், இயக்கத்தினுள் பாலின அடிப்படையிலான பாரபட்சங்களின் அனைத்து அம்சங்களையும் எதிர்ப்பது என்றமுக்கியமான அம்சத்தை இயக்கத்தோடு இணைப்பதன் மூலம் போராட்ட இயக்கத்தின் இயல்பை விரிவுபடுத்தியது என்பது முக்கியமான படிப்பினையாகும்.  இது வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தியது.  பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், ஆரம்ப காலத்தில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தபோதும் தொழிற்சங்க இயக்கத்தினுள் உழைக்கும் பெண்களுக்கான பிரத்யேகமான குழுக்களையும், மேடைகளையும் உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்த பி டி ரணதிவே, “உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் என மார்க்ஸ் கூறியபோது அவர் ஆண் தொழிலாளர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடவில்லை” எனக் குறிப்பிட்டார்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவத்தின் பாலின அடிப்படையிலான வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டமே மேற்கொள்ள வேண்டும்.

உள்ளார்ந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள்  
சமூகமாற்றத்திற்கான சாதி எதிர்ப்பு போராட்ட இயக்கங்களிலும், தலித்துகளின் விடுதலைக்காகவும் துவக்க கால கம்யூனிஸ்ட்கள் பெருமளவிற்கு செயல்பட்டனர்.  பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த பெண்களின் மீது இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  அதேநேரத்தில், கேரளத்தில் நம்பூதிரிகளின் இடையே இஎம்எஸ்தலைமையில் நடைபெற்ற இயக்கங்களைப் போன்ற பெண்களின் நிலையை குறைத்து மதிப்பிட்ட உயர்சாதி அமைப்புகளிடையே மேற்கொள்ளப்பட்ட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே, இந்து சட்டத்திருத்த மசோதா மீதான விவாதமும், போராட்டங்களும் நடைபெற்ற போது, திருத்தங்களை ஆதரித்து கம்யூனிஸ்ட்  பெண்கள் போராட்டக் களத்தில்முன்நின்றனர் என்பது இயல்பான வளர்ச்சிப் போக்காகஇருந்தது.  கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்களின்தலைமையில் நடைபெற்ற இயக்கங்களைப் பொறுத்தவரையில், இந்து சட்டத் திருத்த மசோதாவுக்கான போராட்டம் சாதிய நடைமுறைக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது. 1940களில் துவங்கி 1950கள்
வரையான பத்தாண்டு காலத்தில், இந்து சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவது என்ற பிரச்சனையில் பெண்களின் அதிக எண்ணிக்கையிலான போராட்ட இயக்கங்கள் நடைபெற்றன.  

சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டங்களை, குறிப்பாக பிறப்பு அடிப்படையிலான சாதிய அசமத்துவம், வர்க்கச் சுரண்டல் மற்றும் பாலின ஒடுக்குமுறை போன்றதிட்டமிட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கிடையே இருந்த தலித் பெண்களுக்கான போராட்டங்களை துவக்க கால கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்டனர்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் இவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர்.  சாதியத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளின் புரிதலும், செயல்பாடும் எவ்வளவு பொருத்தமானதாக இருந்தது, தற்போதும் இருந்து வருகிறது என்பதற்கு ஹத்ராஸ் வழக்கு ஒரு உதாரணமாகும்.

எளிய பெண்களிடையே கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடு
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த பெண்களையும் திரட்டுவது என்ற நோக்கத்துடன் அகில இந்திய பெண்கள் அமைப்பு(ஏஐடபிள்யூசி) உருவாக்கப்பட்டது.  இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பெண்களும் இடம்பெற்றிருந்தனர்.  ஆரம்பகாலத்தில் ஏஐடபிள்யூசி போன்ற பெண்களின் கூட்டமைப்புகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் செயல்பட்டனர்.  எனினும், ஏழைப் பெண்களைசென்றடைந்து, பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர்களது பிரச்சனைகளை எழுப்புவதற்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். பெண்களை இயக்கங்களுக்கு அணிதிரட்டுவதில் சாதிய நடைமுறைகளுக்கு எதிராகவும், மதச்சார்பற்ற மாண்புகளுக்காகவும் நடத்தப்பட்ட சமரசமற்ற போராட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின.  இதன் காரணமாக, இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட மாதர் அமைப்புகளை உருவாக்குவதற்கான அவசியம் விரைவில் ஏற்பட்டது.இதனிடையே, மாணவர்களின் பரந்துபட்ட அமைப்பாகிய அகில இந்திய மாணவர் சம்மேளனத்தினுள் (ஏஐஎஸ்எப்) கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட மாணவர்களால் மற்றொரு முக்கியமான முன்முயற்சி 1936ஆம் ஆண்டுமேற்கொள்ளப்பட்டது.  மூன்றாண்டுகள் கழித்து 1939ஆம் ஆண்டில் மாணவிகளை அணி திரட்டிட மாணவிகள் குழு அமைக்கப்பட்டது.  அதன் துவக்ககால அமைப்பாளர்களில் ஒருவராக கனக் முகர்ஜி செயல்பட்டார்.  சிட்டகாங்ஆயுதக் கிடங்கு தாக்குதலில் தீரத்துடன் ஈடுபட்ட கல்பனாதத் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார். மாதர் அமைப்புகளை அமைப்பதற்கான முன்முயற்சியை பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கம்யூனிஸ்ட் பெண்கள் மேற்கொண்டனர்.  உதாரணமாக, .  கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  குறிப்பாக 1942ஆம் ஆண்டில், அப்போது கடும் பஞ்சம் வங்கத்தை வாட்டிவதைத்துக் கொண்டிருந்த சூழலில் ஏழைப் பெண்களிடையே பணியாற்றுவதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு ‘மகிளா ஆத்ம ரக்ஷா சமிதி’ எனும் அமைப்பை உருவாக்கிட கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இத்தகைய முன்னோடிகளின் செயல்பாடுகள் குறித்து “இந்திய மாதர் இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள்” என்ற நூலில் ரேணு சக்ரவர்த்தி விவரிக்கிறார். 

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தை மாநில அளவிலான மாதர் அமைப்புகள் ஒன்றிணைந்து 1954ஆம் ஆண்டு அமைத்தன.  இதில் இதர பகுதி பெண்களோடு இணைந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் செயல்பட்டனர். விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லும் விதத்தில், மாதர்சம்மேளனத்தில் பல மாநிலக் குழுக்கள் அல்லது ஒருபகுதிகிளைகள் சம்மேளனத்திலிருந்து வேறுபட்டு சுயேச்சையாக செயல்படத் துவங்கின.  பின்னர் 1981ஆம் ஆண்டுஇந்த கிளைகள் எல்லாம் ஒன்றிணைந்து இடதுசாரி சிந்தனை கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கின.  ஒரு கோடிக்கும்அதிகமான பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளஇந்தியாவின் மிகப்பெரிய மாதர் அமைப்பாக மாதர் சங்கம்வளர்ச்சியடைந்துள்ளது.  எனினும், கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் மாதர் சங்கத்தில் செயல்படுகின்றனர் என்றபோதும் இதை கம்யூனிஸ்ட் பெண்களின் சங்கம் எனக் குறிப்பிட இயலாது.  பெண் விடுதலைக்கான அரசியல் அணுகுமுறையை மாதர் சங்கம் கொண்டுள்ளபோதும், இது கம்யூனிஸ்ட் அமைப்போ அல்லது சிலசமயம் தவறாகக் குறிப்பிடப்படுவதுபோல் கம்யூனிஸ்ட்டுகளின் பெண்கள் “அமைப்போ” அல்ல.  எந்தவொரு அரசியல்கட்சியையும் சாராது தனக்கான சுயேச்சையான அமைப்புச் சட்ட விதியையும், நிகழ்ச்சி நிரலையும் மாதர் சங்கம் கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, பெரும்பாலான இதன் உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல.  

மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கு   
1964ஆம் ஆண்டில் சிபிஐ(எம்) கட்சி உருவாக்கப்பட்டதில் பெண் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு உத்வேகம் பெற்றது.  துவக்க கால கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக 1964ஆம் ஆண்டில் உருவாக்கிய தனது கட்சித் திட்டத்திலும், பின்னர் 2000ஆம் ஆண்டில் மேம்படுத்திய கட்சித் திட்டத்திலும் பெண் விடுதலைக்கான வர்க்க அடிப்படையிலான அணுகுமுறை குறித்த தத்துவார்த்த தெளிவை சிபிஐ(எம்) கட்சி அளித்துள்ளது. 

“குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பொருத்தமான ஆதரவு நடவடிக்கைகள் ஆகியன குடும்பஅமைப்பை ஜனநாயகப்படுத்துவதற்கு தரப்படும் அழுத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும்” என்பது 2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் மக்கள்ஜனநாயகத் திட்டப்பகுதியில் சேர்க்கப்பட்ட முக்கியமானதொரு இணைப்பாகும்.  பாலின அடிப்படையிலான வேலைபிரிவினைக்கு எதிரானதொரு முக்கியமான மார்க்சிய நிலைபாட்டையும், “புனிதமான” குடும்ப அமைப்பினுள் ஜனநாயகத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் கட்சித் திட்டம் முன்வைக்கிறது.  விவசாயப் புரட்சியின் பகுதியாக சாதியத்திற்கும், பாலின ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.  “50 ஆண்டு கால முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தின் ஆட்சி ஒவ்வொரு தளத்திலும் ஆணாதிக்கத்தை நிரந்தரமாக இருக்கச் செய்துள்ளது” எனக் கட்சித் திட்டம் குற்றம் சாட்டுகிறது.  குறிப்பிடத்தக்க வகையில், “பெண்களாக, தொழிலாளர்களாக, நாட்டின் குடிமக்களாக” என பெண்கள் பல்வேறுநிலைகளில் சுரண்டப்படுவதை சிபிஐ(எம்)மின் கட்சித் திட்டம் விவரிக்கிறது.  டிசம்பர் 2005ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ’‘பெண்களின் பிரச்சனைகளில் கட்சியின் கண்ணோட்டமும் கடமைகளும்” என்ற கட்சியின் மத்தியக் குழுவின் ஆவணம் இந்த புரிதலை மேலும் விவரிக்கிறது.  வீட்டுவேலை குறித்த மார்க்சின் அணுகுமுறை உள்ளிட்டு“பெண்களின் பிரச்சனைகளில்” சிபிஐ(எம்) கட்சியின் அணுகுமுறையை புரிந்து கொள்ள விரும்பும் எவரொருவரும் இதனை வாசிப்பது அவசியமாகும்.    

கொள்கைப் பிரச்சனைகள்
 இந்த வரையறைகளுக்குட்பட்டே இன்றைய சூழலில்கட்சி தனது நிலைபாடுகளை எடுத்து, பெண்களோடு நேரடியாகத் தொடர்புள்ள பிரச்சனைகளில் இயக்கங்களை நடத்துகிறது.  சிபிஐ(எம்) உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்தபல பத்தாண்டுகளாக கட்சி செய்த தலையீடுகள் அனைத்தையும் பற்றி இங்கு குறிப்பிடுவது சாத்தியமில்லை.  எனினும், பெண்களின் நிலையோடு தொடர்புள்ளஎந்தவொரு பிரச்சனையிலும், குடும்பம் உள்ளிட்டு அனைத்து தளங்களிலும் சமத்துவத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் நடைபெற்ற போராட்ட இயக்கங்களில் சிபிஐ(எம்) முன்னிற்காத இயக்கங்களே இல்லை என்று சொன்னால் அது போதுமானதாக இருக்கும்.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான கட்சியின் போராட்டங்கள் பெண்களின் குறிப்பான பிரச்சனைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருந்தன. பெண்களின் சமஉரிமை மற்றும் நீதிக்கான சட்டங்களை முன்னுக்கு கொண்டு வருவதில் சிபிஐ(எம்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதர் இயக்கங்களின் வலுவான கூட்டாளிகளாக இருந்தனர்.  சமகால இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்ட இயக்கங்கள், இளம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, தங்களது வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்வு செய்வதற்கான சுதந்திரம், ஒரே பாலினத்திற்குள்ளான உறவுகளை சட்டப்பூர்வமான ஒன்றாக கருத வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு, சிறுபான்மை இனத்தைச் சார்ந்த பெண்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பது என்பன போன்ற பிரச்சனைகளில் இதர பல பிரதானமான கட்சிகளைப் போலன்றி, சிபிஐ(எம்) பெண்களுக்கு ஆதரவாக தெளிவானதொரு நிலைபாட்டை எடுத்துள்ளது.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்ததைப் போல் சிபிஐ(எம்) தலைமையிலான அரசுகள் உறுதியாகச் செயல்பட்டன.  பெண்களுக்கு ஆதரவான கட்சியின் நிலைபாட்டிற்கு கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஓர் உதாரணமாக இன்று உள்ளது.நாடு தழுவிய அளவில் பிரத்யேகமானதாக உள்ள சுயஉதவிக் குழுக்களின் இயக்கமாகிய குடும்பஸ்ரீ, சபரிமலை பிரச்சனை போன்றவற்றில் சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட பெண்களின் நிலையை உயர்த்துவதற்கான எண்ணற்ற கொள்கைப் பூர்வமானதலையீடுகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.  மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் இதற்கு முன் இருந்தஇடது முன்னணி அரசுகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை மேற்கொண்டன. இவை பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தின.  குறிப்பாக, பெண்களின் சொத்துரிமைன தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு வெகுகாலங்களுக்கு முன்னரேயே, நிலத்தின் மீது பெண்களுக்கு சம உரிமையை அளித்திடத் தேவையான நடவடிக்கைகளான மேற்கு வங்கத்தின் நிலச்சீர்திருத்த இயக்கம், நிலத்திற்கான பட்டாவை ஆண், பெண் என இருபாலரின் பெயரிலும் கூட்டாக விநியோகிப்பது, தனிப்பெண்களுக்கும் பட்டாவை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டது.  அதே போன்று, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கோரும் தற்போதைய இயக்கங்களுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே, மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து நடைமுறைகள் பரவலாக்கப்பட்டன.  இதன் வாயிலாக மேற்கு வங்கத்தின் கிராமப்புற பகுதிகளில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அமைப்புகளில் கிராமப்புறப் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதை கட்சி தலைமையில் நடைபெற்ற இயக்கங்கள் உத்தரவாதம் செய்தன.

கம்யூனிஸ்ட்  பெண்களின் தியாகங்கள்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் கம்யூனிஸ்ட் பெண்கள் தங்களோடு செயல்படும் ஆண் தோழர்களின் தோளோடு தோள் சேர்ந்து மிகப் பெரிய வேலைகளையும், தியாகங்களையும் செய்ததைக் காண முடிந்தது.குறிப்பாக மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில்ஆளும் வர்க்கங்களால் கட்சியின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட காலத்தில் அவர்கள் அளப்பரிய பங்களிப்பை செலுத்தினர்.  கட்சியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூற்றாண்டில் நமது தியாகிகளை நாம் நினைவு கூர்ந்து, வணக்கம் செலுத்தும்போது, செங்கொடிக்காகவும், சமூக-பொருளாதார விடுதலைக்கான போராட்ட இயக்கத்திலும், சோசலிசக் கொள்கைக்காக தங்களது இன்னுயிரை ஈந்த தீரம் மிகுந்த பெண் தியாகிகளும் இத்தகைய எண்ணற்ற தியாகிகளிடையே உள்ளனர் என்பதை நாம் நினைவு கூர்வோம்.

கட்டுரையாளர்: 

===பிருந்தாகாரத்===

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)